எல்லோருக்குமானது இலக்கியம். அதை ஏன், ஒரு சாரருக்கு மட்டும் ஒதுக்க வேண்டும்?
பாமரனின் பந்திக்குப் படங்களை மட்டுமே கொண்டு சென்ற திரைக் கலைஞர்கள், பாடல்களை ஏனோ பரிமாறவே இல்லை. அவர்களின் பசியைக் கவிதையைக் கொடுத்துக் கட்டிப் போட்டனர். கவித்துவம், இலக்கியத்தில் கரைகண்ட கூட்டம், புரிந்த வரிகளை முகர்ந்து கொண்டது. புரியாதக் கூட்டமோ நகர்ந்து சென்றது. படங்களும் பாடல்களும் பாமரனுக்குக் கற்றுக் கொடுக்கும் பாடநூல் அன்றோ? மேட்டிமைத்தனம் அதிலும் மிகுந்திருக்குமாயின், ஏட்டிலக்கியம் படிக்காதவர்க்கு அது எப்படிப் புரியும்? காவிய கவிஞர் வாலி, தொண்ணூறின் இறுதியிலேயே, நற்றமிழ் கோராத நாதங்களில் எல்லா, இயற்றமிழ்த் துறந்து இயல்புத் தமிழுக்குத் தாவினார். அஃதோடு நிறுத்தாமல், புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டு, திரைப்பாடல்களை, அடுத்த கட்டத்திற்கே அழைத்துச் சென்றார்.
படத்தின் அங்கம் தான் பாடல்கள். கதையோடு பாடல்கள் கட்டிக்கிடந்தாலும், கவித்துவம் பாடலிலேக் கொட்டிக்கிடந்தாலும், சொல்ல வந்த கருத்துகளை, நேரடியாய்ச் சொல்லும் நேர்த்தி, எல்லாக் கவிஞர்களுக்கும் இருப்பதில்லை.
கலை உலகத்திற்கே தன்னைக் காணிக்கையாகத் தந்த கமலஹாசன், தனது எல்லாப் படங்களிலும் ஏதோ ஒரு தந்திரத்தைப் புதைத்து வைத்திருப்பார். ஆனால், அது, தோண்டியவர்க்கே தோன்றும். அப்படி, புதைத்தவர் படங்களிலும் பல விதைகளை விதைத்தவர் வாலி. ‘பம்மல் கே சம்பந்தம்’ படத்தின் ‘கடோத்கஜா’ பாடலில் வரும் ஒவ்வொரு வரியையும் கதையோடு கதைக்கும் வண்ணம் களமாட வைத்திருப்பார் கவிஞர் வாலி. காட்சிப் படி, நாயகனின் வயிற்றில் ஒரு கடிகாரத்தை வைத்து நாயகி தைத்துவிட, அதை வெளிக்கொணர வழியறியாமல், காதலையே ஒரு கண்ணியாய் வைக்கிறது கன்னி மனம். அதை எடுக்கவும் முடியாமல், அந்த முயற்சியில் தன்னைக் கொடுக்கவும் முடியாமல், வலைக்குள் அவனை வளைக்கும் திட்டத்தோடு காதலியும், வளைக்குள் தன்னை நுழைக்கும் முயற்சியில் காதலனும் ஆடிப் பாடும் அந்தப் பாடலில்,
“டிக் டிக் என்று சத்தம் உன்னாலே
என்னுள்ளே கேட்கின்றதே கண்ணே!” என்று காதலன் தனது இதயத் துடிப்பைச் சொல்ல,
“பக் பக் என்று அஞ்சி உன்னாலே
என் உள்ளம் வேர்க்கின்றதே கண்ணா!” என்று காதலி அதைக் கடிகாரத்தோடு பொருத்திப் பார்க்கிறாள்.
“ஒரே நாளில் காதல் நோய் தான்
உன்னால் வந்ததே தோழி!
ஒரே ஊசி போட்டால் போதும்
உயிர் வாழுமே தோழனே தோழனே!” என்று ஒவ்வொரு இடத்திலும் ஒன்றியே வரும் வரிகள், இறுதியில்,
“காளை நெஞ்சம் கேட்காதம்மா
கடிகாரம் தான் பார்க்காதம்மா” என்று முடியும் வரிகள், காதலியோடு கைசேரப் பொறுக்காமல் காலத்தை உணர்த்தக் காதலன் பயன்படுத்தும் கடிகாரம், காதலியின் அச்சத்தை அதிகப்படுத்துவதாய் அமைகிறது. அடுத்த சரணத்தில்,
“தையல் போட்டு என்னைத் தைத்தாயே
தையல் இனி உன்னோடு தான் கண்ணே” என்ற வரிகளில், காதலன் மோகத்தையலை மொழிய, காதலி தேகத் தையலென்று திணற, இப்படிச் செல்கிறது அந்தப் பாடல்.
பாடல்களில், கதாநாயகனின் பெயர்களைக் கையாளுவதில் வாலிக்கு நிகர் வாலியே. அதிலும், ஒரு நாயகன், எடுத்தப்பாத்திரத்தை இயம்பும் திறன் எத்தனை பேருக்கு இருக்கிறதோ தெரியவில்லை. ‘அவ்வை சண்முகி’ படத்தில், மணமுறிவு ஏற்பட்ட ஜானகி(மீனா) கூடிப் பிரிந்த கணவனைக் கூடியமட்டும் தவிர்ப்பாள். அது தவறென்று சண்முகி மாமி, வழிய வந்து மொழிய முனைந்தால், கடுகைப் போலக் கடிந்து விழுவாள். கணவனின் துணையின்றிக் காலம் செல்லாது என்பது தான், ‘ருக்கு ருக்கு’ பாடலில் சண்முகி மாமியின் வாதம். அதைக் கமலஹாசன், ஆண் குரலில் தொடங்கி, பெண் குரலில் தொடர்ந்து, இன்னும் கொஞ்சம் பாடலுக்கு எடையை ஏற்ற,
“ப்யாரி ஜானு
கிவ் மீ எ லுக்கு” என்று ஜானகியைப் பற்றிப் பாட, அவ்விடம், புரியாத மொழிக்குப் போர்க் கொடி பறக்கும். இந்தியில் வாலி, எட்ட நின்று ஏந்திப் பிடித்த பதாகையை, தமிழுக்கு மாற்றியதும், அருகில் கொண்டு வந்து ஆட்டம் காட்டுவார்.
“தூணுக்குள்ளும் இருப்’பாண்டி’
துரும்பிலும் இருப்’பாண்டி’
நம்பியவர் நெஞ்சில் நிப்’பாண்டி’
குங்குமத்த வெப்’பாண்டி’
கொஞ்சிக் கொஞ்சி நிப்’பாண்டி’
கொண்டவன் போல் துணை யாரடி?” என்று ஒவ்வொரு வரியிலும், ஜானகியின் கணவன் பெயரை, உயர்த்திப் பிடித்திருப்பார். பாடலின் பொருளைச் சிதைக்காமல், விதையில் எருவைத் தூவுதல் போல, கதையின் கருவைப் பாட்டிலே தூவி, ஜாலங்கள் புரியும் வாலியைக் காலங்கள் உயர்த்தாமல் வேறென்ன செய்யும்?
பேருந்தில், இறங்கும் இடம் நெருங்கும் வேளை, பிடித்த பாடல் ஒலிக்கும் போது, வலிக்கும் வலிக்கு உவமை உள்ளதா எனக்குத் தெரியாது. அது, தொட்டுச் செல்லும் பட்டாம்பூச்சிகளைப் போல, கிட்டும் என நினைத்துக் கிடைக்காமல் போன காதலிக்குச் சமம். அப்படி இறங்கும்போது, ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தில் வரும் ‘கல்யாண மாலை’ பாடல் ஒலித்தால், எத்தனை பேர் இறங்கிச் செல்வோம்?
“நல்ல மனையாளின்
நேசம் ஒரு கோடி
நெஞ்சம் எனும் வீணைப்
பாடுமே தோடி” என்று இத்தனைக் காலங்கள் நாம் இசைத்தது பிழையென்றால், எத்தனை பேரதை ஏற்றுக் கொள்வோம்? ஆம்! பாடலின் வரி அதுவல்ல;
“நல்ல மனையாளின்
நேசம் ஒரு கோடி
செஞ்சம் எனும் வீணைப்
பாடுமே தோடி” என்பது தான் சரியான வரிகள். செஞ்சம் என்னும் வீணையில், சேர்வது எல்லாம் சோக கீதங்களே. ஆடிப் பாடித் திரியும் போதும், மனம், ஆனந்தத்தில் சரியும் போதும், தோடித் துணையே கோடித் தரும். இசையோடு நாம், கூடிக் களிக்க ஓடி வரும். அப்படிப்பட்ட, செஞ்சமெனும் வீணையிலும், சிலவேளைத் தோடி வரும். தொடர்ந்து இன்னல் தரும் மனைவியிடம் கூட ஏதோ ஓர் இன்பம் இருக்கிறது என்பதை உணர்த்த உதிர்த்த வரிகளே அவை. அதை நாம், பிழையாக்கி, நியாயப் படுத்திவிட்டோம். நல்லவேளை, நியாயப் படுத்தும் வேளையில், பாடலின் பொருள் மாற்றிக் கவிஞரைக் காயப் படுத்தவில்லை என்பதே இன்பம் தான்.
கவிஞர்களுக்கே இயல்பானது மொழியாளுமை, கவித்துவம். இவை இரண்டிலும் சிகரமாய் இருந்தபோதிலும், வாலியின் சிறப்புத் தனித்துவம். நிறையப் பாடல்களை, புதுமைகளால் நிரப்பியவர் கவிஞர் வாலி. ஐம்பது ஆண்டுகள் திரைத்துறையில் இருந்த போதிலும், பழைமைத் தன்னைப் பாதிக்காதபடி பார்த்துக்கொண்டவர்.
‘வில்லுப்பாட்டுக்காரன்’ படத்தில் நாயகனுக்கும் நாயகிக்கும் சொற்போர் ஏற்பட, ‘கைகள் தட்டாமல் ஓசை வருமா, உதடு ஒட்டாமல் பாட்டு வருமா’ என்று சொல் அங்கமாய் இருக்கும் பாடலுக்கு, வில்லங்கமாய் ஒரு சவால் விட, உதடுகள் ஒட்டாத வார்த்தைகளால், முழுப்பாட்டையே குளிப்பாட்டி இருப்பார் கவிஞர் வாலி.
“தென்றல் வந்து
ஆ… இல்லையே வந்து ஒட்டுதே
அந்தத் தேரடியில் ஹான்…
இது பரவாயில்லை
சின்னக் கன்னிப்பெண்ணை
அய்யயோ பெண்ணை ஒட்டுதே
தள்ளி நில்லு
அஞ்சி அஞ்சி கெஞ்சிக் கெஞ்சி
செஞ்சி செஞ்சி ஹான்
இஞ்சி இஞ்சி இஞ்சி இஞ்சி
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடி
காலக் காலங்கள்
தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடியே…
ஆனந்த ராகங்களைக் கிளியே
இங்கேதான் கேட்டுக்கடி
ஆடாத ஆட்டங்கள்தான் கிளியே
எங்கிட்ட ஏத்துக்கடி
ஏழைகள் காதுகளில்
செந்தேன் அள்ளி
சேர்க்கிற கலைஞனடி
தென்னாட்டுல இருக்கிற
இதயங்களைச்
சங்கீதத்தில் ஈர்க்கிற
இளைஞனடி
நாட்டுல கேட்டுக்கடி
இசையில் இங்கு
நான் செஞ்ச சாதனைதான்
நாக்குல இருக்குதடி எடுத்துத் தர
ஆயிரம் கீர்த்தனைதான்”
சிவக்குமார் நடித்த ‘சிட்டுக்குருவி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘என்கண்மணி’ பாடல், நாயகன் நாயகியின் மனசாட்சிகள் வெளியில் தோன்றி இடையே இடையே ஓரிரு வரிகள் படுவதாக அமைந்திருக்கும். மொத்தப் பாடலைக் கேட்கும்போதும் சரி, நிஜ நாயகனின் வரிகளைப் பார்த்தாலும் சரி, மனசாட்சிகளின் வரிகளை மட்டும் பார்த்தாலும் சரி, ஒரு இடத்தில் கூடப் பொருள் குன்றாமல் கொடுத்திருப்பார் கவிஞர் வாலி.
“ஆண்: என் கண்மணி உன் காதலி
இளமாங்கனி
உனைப் பார்த்ததும்
சிரிக்கின்றதே சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நீயும் நகைச்சுவை மன்னனில்லையோ
பெண்: என் மன்னவன் உன் காதலன்
எனைப் பார்த்ததும்
ஓராயிரம் கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ”
பாடலின் காட்சியோடு பார்க்கும்போது, மொத்தப் பாடலின் வடிவமும் முழுதாகப் பொருள் கொடுக்கும். அதை நிஜம் என்றும் மனம் என்று பிரித்து எடுக்கையில்,
“என் கண்மணி
இளமாங்கனி
சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு
உன் காதலி
உனைப் பார்த்ததும்
சிரிக்கின்றதேன்
நீ நகைச்சுவை மன்னனில்லையோ
என் மன்னவன்
எனை பார்த்ததும்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும்
கேட்கத் தூண்டுமோ
உன் காதலன்
ஓராயிரம்
கதை சொல்கிறான்
நீ ரசிக்கின்ற
கன்னியில்லையோ”
இப்படித் தனித் தனியாகப் பிரித்தாலும், குன்றாத பொருளைக் கொட்டிக் கொடுத்திருப்பார் கவிஞர் வாலி.
ஒரு காலத்தில், இல்லை என்று நிராகரிக்கப்பட்ட எல்லா விடயங்களும், பின்னாளில் பெரிதாகப் போற்றப்பட்டவையே. எல்லோரும் ஏற்பார்களா என்று எண்ணாமல், எடுத்த முடிவை, என்ன நேர்ந்தும் இறங்கி அடிப்பதே வென்றவர் பலரின் வேத வாக்கு. கவிஞர் வாலியும் சோதனை மேற்கொள்வதில் சோர்ந்ததே இல்லை. ‘மகளிர் மட்டும்’ படத்தில் வரும் ‘கறவை மாடு மூனு’ பாடலில், நாயகி மூவரோடு நாசர் ஆட, கவிஞர் வாலி, ஒவ்வொரு நாயகியின் பாத்திரங்களுக்கேற்ப பாடல் வரிகளை அமைத்திருப்பார். முதலில் பாடும் சத்யா(ரேவதி) நல்ல தமிழில் தொடங்குவார்.
“பெண்: தூங்கவில்லை நெடு நாளா
தென்றல் தாக்கியதே கொடு வாளா
நான் இருந்தேன் தனி ஆளா – இன்று
நாம் கலக்கும் கும்பமேளா
ஆண்: தாமரை மேனி
தீண்டிடும் தேனீ
நான் அடி ராணி – என்னை
நாடியே வா நீ
பெண்: நீ என்னைக் கொஞ்சம் கொஞ்சும் நேரம்
இன்பம் இன்பம் ஆரம்பம்” என்று அவர் முடிப்பதற்குள், பாடல் பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு வரும். அடுத்ததாகத் தொடங்கி, ஐயர் ஆத்துப் பெண்ணாக வரும் ஜானகி(ஊர்வசி), மடிசார் கட்டும் மாமியாகத் தொடர,
“பெண்: அடிச்சாப் பாரு கண்ணு
ஐய்யர் ஆத்து பொண்ணு
மடிசார் காட்டும் ராணி
மயிலாப்பூருக்கு வா நீ
விளக்கேத்தும் சாயங்காலம் நேரம் – மனசுல
உருவாச்சு உன்னால் ஒரு பாரம்!
ஆண்: நான் உன்ன நெனச்சு ஏங்கினேன்
முள்மேலே படுத்துத் தூங்கினேன்!
பெண்: ஆனாலும் அசடு
ஆண்: ஹி… ஹி…
பெண்: ஆனாலும் அசடு நீங்கதான்…
வாங்கோண்ணா மடியில் தூங்கத்தான்…
ஆண்: சிந்தாமணி… செம்மாங்கனி…
எந்நாளும் நீ… என் மோகினி…
பெண்: ஆஷ தீர கட்டுங்கோ
கோந்து போல ஒட்டுங்கோ
நேக்குத்தான் என்னவோ
பண்ணறதே தொடத் தொட…” என்று நெளியும் பெண்ணிடம் அவன், வரம்புகள் மீற நரம்புகள் ஏற உடனடியாய் ஓடிவருவாள், மன்னிக்க, பாடிவருவாள் பாப்பம்மா(ரோகினி).
“பெண்: வயசுப் பொண்ண மாமா
வளச்சுக் கட்டு பாப்போம்!
தேங்காப் பாலத் தேடி
வந்தது இந்த ஆப்பம்!
சவுடாலா சயிட் அடிக்க நேத்து – எதிருல
சமைஞ்சாடும் சாதிப்பூவப் பாத்து!
ஆண்: அடியே ஆத்தா நீ நாட்டுக் கட்ட,
புடிச்சேன் பாரு வந்து மாட்டிக்கிட்ட!
பெண்: அட ஏன் ராசா ஓ அழக எண்ணி,
நெடுநாள் ஆச்சு நான் நாஷ்டாப் பண்ணி!
ஆண்: அடியே குப்பக் கூழம் நீ கூட்டும் போது
இடுப்ப பாக்காதவன் ஆபிஸுல ஏது?
பெண்: முன்னால் உள்ளது சிங்காரம்
பின்னால் உள்ளது ஒய்யாரம்,
கண்ணால் கண்டதும் அல்லோரும்
தன்னால் போடணும் திண்ணாராம்!
அட சும்மா இப்பிடி
நின்னா எப்பிடி மாமோய்?”
இப்படி ஒவ்வொரு கட்டமாய் வரிகள் வகைகள் மாறும் சாத்தியக்கூறுகள் உண்டெனில் வாத்தியக்கூறுகள் வாய்மூடி இருக்குமா? சந்தங்கள் தாண்டி, பாடலுக்கும் வரிக்கும், சொந்தங்கள் இல்லையென்று யாரும் சொல்லாதிருக்க, ஜானகி, எஸ்.பி.பி துணையுடன், இளையராஜாவும் வரிகளை இசையில் மிதக்கவிட்டிருப்பார். காவிரியே வந்தாலும் அவர் சொல்லும் கரைகளைத் தாண்டாது தானே? இறுதியில் வரும் வரிகள், அதே வரிகளாயினும் அதை, அடுத்த கட்டத்திற்கு எடுத்த பொறுப்பு எஸ்.பி.பி, ஜானகி, இளையராஜா என எல்லோரையும் சாரும்.
“ஆண்: கரவா மாடு மூனு காள மாடு ஒன்னு
பெண்: அடிச்சா லக்கிப் பிரைஸு
அதிஷ்ட்டக் கார ஆளு!
சுகவாசி ஆட்டம் போடும் நேரம்
மனசுல விலைவாசி போலப் போத ஏறும்!”